எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு கவலைக்கிடமாக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட எம்.பி. தயாசிறி ஜயசேகர நேற்று (20) பாராளுமன்றத்தில் வெளிப்படையாக சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
“துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்கள் இன்று சாதாரணமாகிவிட்டன. அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சிக்கும் எமக்கு உயிர் அச்சுறுத்தல்கள் உருவாகியுள்ளது. எனவே, எமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்” என அவர் கூறினார்.
ஒழுங்குவிதிப் பிரச்சினை விவாதத்தின் போது கருத்து வெளியிட்ட அவர், “பாதாளக் குழுக்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சிகளை பாதுகாப்பு அமைச்சர் சபையில் குறிப்பிடுகிறார் என்றால், அவர்களது பெயர்களையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். பொய்யான குற்றச்சாட்டுகளை எல்லோருக்கும் சுமத்தக் கூடாது” என்றார்.
மேலும், “எதிர்க்கட்சியினரைக் கைது செய்வது ஒரு திட்டமிட்ட நடவடிக்கை. எம்.பி. சாமர சம்பத்தின் கைது அதற்கு எடுத்துக்காட்டாகும்” எனவும், “ஆளுங்கட்சியினருக்கு பாதுகாப்பு தேவையில்லையெனில் அவர்கள் பாதுகாப்பின்றியே இருக்கலாம்; அவர்களை மக்கள் கூட அடையாளம் காணமுடியாது” என்றும் விமர்சித்தார்.
அரசாங்கத்தை விமர்சிக்கும் எங்களிடம் எங்களது உறவினர்களும் நண்பர்களும் அச்சத்துடன் இருக்கும்படி கூறுவதாகவும் அவர் தெரிவித்தார். “எமது பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று கூறப்பட்டாலும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார்.